புலிகளின் முன்னாள் சிறுவர் போராளிகளுக்குக் கல்விக் கருத்தரங்கு!
புலிகளின் முன்னாள் சிறுவர் போராளிகளுக்குக் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான கல்விக் கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 300ற்கும் மேற்பட்ட சிறுவர் படையினருக்கான கல்விக் கருத்தரங்குகளை புனர்வாழ்விற்கான ஆணையாளர் நாயகம் வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து ஒழுங்கு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர் விடுதி மண்டபத்தில் இந்தக் கருத்தரங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கிழமை நாட்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா தெற்கு கல்வி வயலத்தைச் சேர்ந்த கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான ஆசிரிய ஆலோசகப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தக் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்துள்ளனர். பரீட்சை நடைபெறவுள்ள எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் இந்தக் கருத்தரங்குகளை நடத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் புலிகளின் சிறுவர் படையைச் சேர்ந்த 150 மாணவிகளும் 200 வரையிலான மாணவர்களும் இந்தக் கருத்தரங்குகளில் பங்குபற்றி வருவதும் குறிபபிடத்தக்கதாகும்.